Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Sonntag, 17. April 2016

சித்ரா பவுர்ணமி 21.04.2016

சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.
                                           சிறப்புப் பொருந்திய இத் திருநாள் 21.04.2016 வியாழக்கிழமை அமைவதாக ஜோதிடம் கணித்துள்ளது. இத் (பௌர்ணமி) திதியும், (சித்திரை) நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்திரா பெளர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்பெறுகின்றது.
                           இத் தினத்தில் ஆலயங்களிலே  விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. 
சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.
அத்துடன் அம்பிகையின் ஆலயங்களில் "சித்திரைக் கஞ்சி" படையல் செய்வதன் மூலம் அம்பிகையின் சீற்றத்தை, கோபத்தை, தணிப்பதனால் அம்பிகையின் சீற்றத்தால் ஏற்படும் அம்மாள் வருத்தம்(கொப்பளிப்பான், சின்னம்மை போன்றவை) ஏற்பாடாது எம்பது ஐதீகம். அதனால் அம்பிகை ஆலயங்களில் குளிர்த்தி பெரு விழாவாக கொண்டாடப்பெறுகின்றது. 
இறைவியாகிய அம்பாள்; இயற்கையின் சக்தியாக தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தோருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள்.
தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந் நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.
பிதிர்களுக்குரிய விரதநாள்
தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று; தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதத்தை மேற்கொள்கின்றனர். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்திலே விரதமிருந்து வழிபாடு செய்வதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.
எம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.
வான மண்டலத்தில்; சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை “திதி” என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு ”திதி” கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பெளர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)
அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15 நாளான பெளர்ணமி அன்று 180 ஆம் டிகிரியை அடைகிறது. சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (ஈர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.
சூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் செய்கிறோம்.
சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பெளர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.
மனித மனத்தின் மீது அமாவாசை, பெளர்ணமி திதிகளின் தாக்கம், அமாவாசை, பெளர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை. மன அழுத்தம், ஹிஸ்டீரியா பொன்றவைகள் உண்டாவதையும் அனுபவரீதியாகக் காண்கிறோம்.
இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால் சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது.
ப்ராணாயாம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம் “மனம் வசப்பட உன்னை உணர்வாய்” என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான்.
அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால் வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது. அத்துடன் இச்சித்திரா பௌர்ணமி விரதத்தைக் கைக்கொள்வதன் மூலம் மறைந்து விட்ட தாயாரை ஆண்டு தோறும் நினைவுபடுத்திக் கொள்ளவும் வழிகோலப்படுகின்றது.
தாய் உயிருடன் இல்லாத ஆண்களும், தாரமிழந்த பெண்களும் காலையில் எழுந்து புனித (இலங்கையில் கீரிமலை, பாலாவி போன்ற) நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை மனதில் நினைத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த முதலாம் ஆண்டு தினம் முடியும் வரை இவ்விரதத்தை அனுசரிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் செய்யாமல் இவ்விரதத்தை அனுசரிப்பர்.
பாவ காரியங்களிலிருந்து நீங்கி மேலான புண்ணிய சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் வழிமுறையை விரதங்கள் காட்டுகின்றன. உடலையும் உள்ளத்தையும் சீர் செய்யவும் விரதங்கள் வழி கோலுகின்றன. திருவிளையாடற் புராணத்திலே சித்திரை விரதத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இந்நூலில் இந்திரன் சிவனை வணங்கித் தீவினைகள் நீங்கப்பெற்றான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மறைந்து விட்ட தாயாரை நினைவிற் கொண்டு விரதமிருப்பதுடன் வாழ்வில் தவறுகள் தவிர்க்க நல்வழி செய்ய தூண்டுதல் செய்யும் சித்திர புத்திரனார் விரதமிருப்பதும் இந்நாளின் சிறப்பை இரட்டிப்பாக்குகின்றது.

சித்ரா பௌர்ணமி; தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்தராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான்.
குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.
இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம்.
அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய   பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
தயிர் அபிஷேகம் சிறப்பானது. தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு&நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது. இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம். ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் சிறப்பு பண்டிகைகளாகவே கொண்டாடுவது  விசேஷமானதாக கருதப்படுகிறது.  
துன்பங்கள் தொலைய, துயரங்கள் நீங்க எம்மைப் பீடித்த தோஷங்கள் மறைய, வாழ்வில் நிம்மதி நிலைக்க, அன்னையை ஆசீர்வதிக்க சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதமிருந்து அம்மனையும் சித்திர புத்திரனாரையும் வழிபட்டு அருளும் நலமும் பெறுவோமாக.
சித்திர(குப்தன்)புத்திரன் அவதாரம்:
தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார்.
சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.
தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.
பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே; இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச் செய்த பெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும் இந்திராணியும் சம்மதித்தனர்.
காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும்! தன் கணக்குப்பிள்ளை பதவியை மறக்காத குழந்தையாகப் பிறந்தார். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயரிட்டார்கள் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியும்.
குழந்தையாக இருக்கும்போதே சித்திர புத்திரன் யாரைப் பார்த்தாலும், அவர்களின் பாவ, புண்ணிய கணக்கை அப்படியே துல்லியமாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். எல்லாருக்கும் ஆச்சர்யம். இந்திரனுக்கோ பெருமை தாங்கவில்லை. இவ்வளவு புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகனை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எமனிடம் அனுப்பிவைக்க முடிவெடுத்தான்.
அதாவது, எல்லா மக்களுடைய வாழ்வின் முடிவிலும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கும் கணக்கைச் செய்ய! பிறவிக்கடன் தீர்த்து எப்போது கயிலாயம் செல்வோம் எனக் காத்திருந்த சித்திர புத்திரன், இதைக் கேட்டுக் கலங்கினான். என்னால் அங்கு போக முடியாது என்று சொல்லி கயிலாயம் சென்றுவிட்டான். இதனால் இந்திரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். மகனை மறக்கமுடியாமல் கயிலாயம் போய், சிவபெருமானிடம் முறையிட்டான். மகனை தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டான்.
பரமேஸ்வரனும் அவனது வேதனையை உணர்ந்து, இனிமேல் சித்திர புத்திரன் உன்னுடனே, உன் தளபதி யமனின் உதவியாளனாக இருக்கட்டும் என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் கொடுத்தார்.
இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட சித்திர புத்திரனை யார் விரதமிருந்து வணங்கினாலும், அவர்களுக்கு பாவச்சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வார் என்ற வரத்தையும் அவருக்கு வழங்கினார் சர்வேஸ்வரன். எனவே சித்ரா பவுர்ணமியில் சித்திரபுத்திரனை விரதமிருந்து வணங்கினால் பாவச்சுமை குறையும்; புண்ணிய பலம் கூடும்.
சித்திரகுப்தனாரின் திருமண நாளே சித்திரைப் பௌர்ணமியாகும் எனவும் கூறுவாருமுளர். அவர் நமது பிறப்பு, பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்களைக்  கணக்கெடுத்து  அவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும்.
எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ”நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.
மேலும் அன்றைய தினம் புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.
சித்திர புத்திரன், சூரியனுக்கும் நீலாதேவிக்கும் சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பிறந்தார் எனவும், அதனால் அவருக்கு சித்திர புத்திரன் எனபெயர் உண்டாயிறு என்றும், அவர் சூரியனைப்போல் அறிவிலும் தேஜஸிலும் சிறந்து விளங்கினார் எனவும், வேறு ஒரு புராணக் கதையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது